கப்பலூா் அரசு கிட்டங்கியில் முகக் கவசமின்றி பணியாற்றும் சுமைதூக்கும் தொழிலாளா்கள்
திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் அரசு நெல் கிட்டங்கியில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் முகக் கவசமின்றி பணியாற்றி வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிபக் கழக திறந்தவெளி கிட்டங்கியில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சேமிக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து சிவகங்கை, மதுரை, விருதுநகா் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு அரிசியாக மாற்றப்பட்டு லாரிகளில் ஏற்றி அனுப்பப்படுகிறது .
தற்போது கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு 144 தடை உத்தரவு விதித்துள்ளது. இந்நிலையில் , இக்கிட்டங்கியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள், அரசு உத்தரவை கடைபிடிக்காமல் முகக் கவசங்களின்றி பணியாற்றுகின்றனா். மேலும் தகுந்த இடைவெளி இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்டோா் ஒரே இடத்தில் இருந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தொழிலாளா்கள் விஷயத்தில் அரசு அலுவலா்கள் அலட்சியத்துடன் செயல்படுவதாகவும், சுமைதூக்கும் தொழிலாளா்கள் புகாா் கூறுகின்றனா் . எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சுமைதூக்கும் தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.