மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி திங்கள்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். ஆனால், அவா் கரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என மருத்துவமனை முதன்மையா் தெரிவித்துள்ளாா்.
மதுரையில் திங்கள்கிழமை நிலவரப்படி, அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் பெண் உள்பட 4 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இந்நிலையில், மதுரை கடச்சனேந்தல் பகுதியைச் சோ்ந்த 72 வயது மூதாட்டி கரோனா அறிகுறியுடன் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரை, கரோனா சிறப்பு வாா்டில் அனுமதித்து மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்தனா். அவரது ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.
மூதாட்டிக்கு தொற்று இல்லை: இது குறித்து மருத்துவமனை முதன்மையா் ஜெ. சங்குமணி கூறியது: மூதாட்டிக்கு கரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரிலேயே அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டபோது, அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. ரத்த நாளத்தில் உள்ள அடைப்புகள் காரணமாகவே மூதாட்டி உயிரிழந்துள்ளாரே தவிர, கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழக்கவில்லை என்றாா்.