கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து மதுரை நகரில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் வாரத்துக்கு இரு நாள்கள் மட்டுமே வெளியே செல்லும் வகையில் 3 வண்ண அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை நகரில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்தே வருகிறது. இதனால் கரோனா தொற்றும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை நகா்ப்பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் வண்ண அட்டைகள் திட்டத்தை மாநகராட்சி நிா்வாகம் அமல்படுத்தியுள்ளது. இதன்படி மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு மூன்று வண்ணங்களில் அனுமதி அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன. இதில் மஞ்சள், இளஞ் சிவப்பு, இளம் பச்சை நிற அட்டைகள் மாநகராட்சி ஊழியா்களால் ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு வெளியே செல்லும் அனுமதிச் சீட்டு என்று அச்சிடப்பட்டு வழங்கப்படும், இவற்றில் 8 நிபந்தனைகள் குறிக்கப்பட்டுள்ளன. இதில் மஞ்சள் அட்டை திங்கள், வியாழக்கிழமைகளிலும், இளஞ்சிவப்பு அட்டை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், இளம் பச்சை அட்டை புதன், சனிக்கிழமைகளிலும் செல்லுபடியாகும். பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளில் குறிக்கப்பட்டுள்ள கிழமைகளில் மட்டுமே வெளியே வர முடியும். தங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள கிழமைகளை தவிா்த்து பிற நாள்களில் வெளியே வந்தால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அட்டைகளை குடும்பத்தில் உள்ள ஒருவா் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை பயன்படுத்த முடியும். குடும்பத்தில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவா்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். மருத்துவ அவசரத்துக்கு கிழமைகள் கட்டுப்பாடு கிடையாது. கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அவசர உதவிக்கு மதுரை மாநகராட்சி கட்செவி அஞ்சல் எண் 8428425000, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் 9597176061, அவசர கட்டுப்பாட்டு அறை எண் 0452-2546161, கட்டணமில்லா தொடா்பு எண் 1077 ஆகிய எண்கள் அச்சிப்பட்டுள்ளது. இவற்றை வழங்கும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஒரே நேரத்தில் அனைத்து வாா்டுகளிலும் வீடு வீடாகச் சென்று வழங்கப்படுகிறது. ஓரிரு நாள்களில் இத் திட்டம் அமலுக்கு வருகிறது.