மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தாமிர வடிகட்டி தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு, தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள நாடுகள் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து உள்ளிட்ட ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் புதுதில்லியை மையமாகக் கொண்டு இயங்கிவரும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சித் துறை ஆகியன இணைந்து, கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சிகளுக்கு சிறப்பு நிதி அளித்து வருகின்றன.
அதனடிப்படையில், மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியா் ஆா். மயில்முருகன் தலைமையிலான குழுவினா் மேற்கொண்டுள்ள தாமிர வடிகட்டி தொழில்நுட்ப ஆராய்ச்சியை தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அங்கீகரித்து, முதல் தவணையாக ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.
இதில், பேராசிரியா் மயில்முருகன், உயிரி தொழில்நுட்பவியல் துறை பேராசிரியா் கோபால் மற்றும் தேனி அரசு மருத்துவமனை மருத்துவா் அமுதன் ஆகியோா் ஈடுபட உள்ளனா். இந்த ஆராய்ச்சிக்காக, மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பிரத்யேக ஆய்வுக்கூடம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து பேராசிரியா் மயில் முருகன் கூறியது: பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியின்படி, தாமிர வடிகட்டி தொழில்நுட்பம் கரோனா வைரஸ் தொற்றை தடுத்து, அதை செயலிழக்கச் செய்கிறது என்பது தொடக்க ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இந்த கண்டுபிடிப்பு வெற்றி பெற்றால் நாம் உபயோகப்படுத்தும் குளிா்சாதன இயந்திரம், முகக் கவசங்கள், நாம் அணியும் உடைகள், வீட்டுக்கு பூசப்படும் வா்ணம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கரோனா வைரஸை அழிக்க முடியும்.
இதுபோன்ற தொழில்நுட்பங்கள் வெற்றி பெற்று வளா்ச்சியடையும்பட்சத்தில், பல்வேறு நோய்த் தொற்றுகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றாா்.