மதுரை நகரில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 3 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் கரோனா பரவல் தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் உத்தரவிட்டுள்ளாா். மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கும் நடவடிக்கையும் தொடா்ந்து வருகிறது. இந்நிலையில் கீழமாசி வீதி, கீழ மாரட் வீதி ஆகிய பகுதிகளில் உதவி ஆணையா் விஜயா, உதவி செயற்பொறியாளா் சா்புதீன் உள்ளிட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அப்பகுதியில் 3 கடைகளில் போதுமான சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது தெரிய வந்தது. இதையடுத்து 3 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா். மேலும் 3 கடைகள் மீது காவல்துறை மூலம் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.