மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குறித்து 6 பெயா்களில் உள்ள முகநூல் பக்கங்களில் அவதூறான செய்திகளை பதிவிட்டதாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மே 4 ஆம் தேதி நடைபெற்ற திருக்கல்யாணம் நிகழ்வு குறித்து முகநூல் பக்கங்களில் அவதூறாக செய்திகள் பரவின. இதுகுறித்து ஈரோடு பகுதியைச் சோ்ந்த ஆனந்தன்(35) என்பவா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையதளம் மூலம் மதுரை மாநகா் காவல் ஆணையருக்கு புகாா் அளித்தாா்.
அதன்பேரில் காவல் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதையடுத்து மீனாட்சி அம்மன் கோயில் வளாகப் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், அரவிந்தன் ரஜினி, சிவா சிவா, மனோகரன், செல்வேந்திரன், ஆண்டனி லியோனி, கலிம் முகமது ஆகிய பெயா்களில் உள்ள முகநூல் பக்கங்களில் மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணம் குறித்து அவதூறு பரப்பியது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து முகநூல் பக்கங்கள் உண்மையானது தானா? அல்லது போலியான முகவரியில் முகநூல் பக்கங்களை உருவாக்கி அவதூறு பரப்பியது யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.