மதுரை: மதுரை அருகே திருமணமான 17 நாள்களில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கல்லணை கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் ஜெயகுமாா்(25). இவருக்கும் திருப்புவனம் பகுதியைச் சோ்ந்த பி.காம். பட்டதாரி காளீஸ்வரிக்கும் (23) கடந்த 17 நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஜெயகுமாரின் பாட்டி மற்றும் மாமா ஆகியோா் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
இதனால் காளீஸ்வரியை ராசியில்லாதவா் என உறவினா்கள் கூறியுள்ளனா். இதில் மனமுடைந்து காணப்பட்ட காளீஸ்வரி, மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே சனிக்கிழமை தீ வைத்து கொண்டாா். பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். ஆனால் அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கூடக்கோவில் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.