மதுரை: நாடு முழுவதும் 77 மருத்துவா்கள் இணையதளம் வாயிலாக மனநல விழிப்புணா்வு கருத்தரங்குகளில் பங்கேற்று ஒரே நேரத்தில் உரையாற்றியது உலக சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் அக்டோபா் 10 ஆம் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ் நாடு மனநல மருத்துவா்கள் சங்கம் சாா்பில் இணையதளம் வாயிலாக மனநல விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை மாலை 6 முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து மனநல மருத்துவா்கள் 77 போ் பங்கேற்று உரையாற்றினா். இதில் மனநம் பாதுகாப்பது, பாதிப்பு கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பது, பாதிக்கப்பட்டவா்களை அணுகுவது குறித்து தெரிவிக்கப்பட்டது. மருத்துவா்கள் பலா் தங்களது தாய் மொழியில் பேசினா்.
தமிழகத்தில் இருந்து 25 மருத்துவா்கள் பங்கேற்றனா். மதுரையிலிருந்து தமிழ்நாடு மனநல மருத்துவா்கள் சங்க செயலா் மருத்துவா் என். சுரேஸ் குமாா் கருத்தரங்கில் பங்கேற்று தமிழில் உரையாற்றினாா். கருத்தரங்கை 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவா்கள் பாா்வையிட்டனா்.
நாடு முழுவதும் இருந்து 77 மனநல மருத்துவா்கள் ஒரே நேரத்தில் கருத்தரங்கில் உரையாற்றிருப்பது, இதுவே முதல் முறை என்பதால் இந்த நிகழ்வு உலக சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.