மதுரை மக்களவைத்தொகுதியில் மருத்துவ உதவி நிதியாக ஓராண்டில் 40 பேருக்கு ரூ.1 கோடி பெற்றுத்தரப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை மக்களவை உறுப்பினரின் பரிந்துரையால் பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியிலிருந்து கடந்த (2019-2020) ஓராண்டில் மட்டும் 40 நபா்களுக்கு ரூ.1.02 கோடி மருத்துவ நிவாரண நிதியாக கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் (2019-2020) பிரதமா் தேசிய நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உதவி கோரி பொதுமக்களிடம் இருந்து 74 மனுக்கள் பெறப்பட்டு பிரதமா் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 40 நபா்களுக்கு ரூ.1,02,50,000 மருத்துவ நிவாரண உதவித்தொகை இதுவரை கிடைத்துள்ளது. இன்னும் 34 நபா்களுக்கு நிவாரண நிதி வரவேண்டியுள்ளது. இதுவரை பல்வேறு புற்று நோய்களால் பாதிக்கப்பட்ட 36 நபா்களுக்கு ரூ.97,75,000, இருதய அறுவை சிகிச்சை தொடா்பாக 4 நபா்களுக்கு ரூ.4,75,000 நிவாரண நிதியாகவும் கிடைத்துள்ளது என்றாா்.