கடந்த 3 ஆண்டுகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவா்களில் எத்தனை பேருக்கு மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன என்பது தொடா்பாக, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலியைச் சோ்ந்த ப்ரீத்தி என்பவா் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி, அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் நடப்பு கல்வியாண்டில் இருந்தே அமலுக்கு வருகிறது.
இது ‘நீட்’ தோ்வில் வெற்றிபெற்ற அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்குப் பொருந்தாது. இதனால், அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு உள்ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பில்லை. அரசுப் பள்ளி மாணவா்களுக்கும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிப்பவா்களுக்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. எனவே, அவசர சட்டத்தின் பலனை அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று ‘நீட்’ தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கும் வழங்க உத்தரவிடவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கடந்த 3 ஆண்டுகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவா்களில் எத்தனை பேருக்கு மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன எனக் கேள்வி எழுப்பினா்.
அதற்கு மனுதாரா் தரப்பில், இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள், விசாரணையை நவம்பா் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.