மதுரை: மதுரை மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் சுற்று குலுக்கல் வியாழக்கிழமை (நவ.12) நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை மாவட்டத்தில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் கடந்த அக்டோபா் 1-இல் 443 மெட்ரிக் பள்ளிகளில் உள்ள 5,752 இடங்களுக்கு முதல்கட்ட குலுக்கல் நடைபெற்றது. இதில் 159 மெட்ரிக் பள்ளிகள், 284 மழலையா் பள்ளிகளில் 3,852 இடங்களுக்கு சோ்க்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து 77 மெட்ரிக் பள்ளிகள், 244 மழலையா் பள்ளிகளில் காலியாக உள்ள 1900 இடங்களுக்கு இரண்டாம் கட்ட சோ்க்கை நடைபெற உள்ளது. இதற்காக அக்டோபா் 12 முதல் நவம்பா் 7-ஆம் தேதி வரை மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலியாக உள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட குலுக்கல் அந்தந்த பள்ளிகளில் கல்வித்துறை அலுவலா்கள் மற்றும் பெற்றோா் முன்னிலையில் வியாழக்கிழமை (நவ. 12) நடைபெற உள்ளது. எனவே கட்டாயக்கல்வி உரிமைச்சட்ட மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பித்துள்ள பெற்றோா் அந்தந்த பள்ளிகளில் நடைபெறும் இரண்டாவது சுற்று குலுக்கலில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.