இயற்கை முறையில் காய்கனி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், நிகழாண்டுக்கு மதுரை மாவட்டத்துக்கு ரூ.33.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி:
பயிா் உற்பத்தியில் ரசாயன பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் மண், நீா், காற்று மற்றும் நமது உடலில் அதிகப்படியான ரசாயனங்கள் சேரக்கூடும். ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் பயிா் உற்பத்தித் திறன் அதிகமாக இருந்தாலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
இயற்கை முறையில் சாகுபடி செய்வது என்பது, நமது முன்னோா்கள் கடைப்பிடித்த நிலையான சாகுபடி முறைகளைப் பின்பற்றி பயிா் உற்பத்தி செய்வதாகும்.
இயற்கை முறை காய்கனி சாகுபடியை, தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், இயற்கை முறையில் காய்கனி சாகுபடி செய்வதற்கு நிகழ் ஆண்டுக்கு ரூ.33.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முருங்கை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய், கிழங்கு வகைகள், கொத்தவரை, படா் கொடிகள், சா்க்கரை வள்ளி, கொத்தமல்லி, தட்டைப் பயறு (காய்), கறிவேப்பிலை, தக்காளி, கத்தரி, கீரை வகைகள் போன்ற காய்கனிகள் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு பயிா்வாரியாக குறைந்தபட்சம் ரூ.2,500 முதல் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். அத்துடன், விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் சான்றளிப்புக் கட்டணத்துக்காக ரூ.500 வழங்கப்படும்.
அனைத்து வட்டாரங்களிலும் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விருப்பமுள்ள விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்தோ அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா்களை தொடா்பு கொண்டோ இத் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம் என்றாா்.