மதுரை நகரில் வைகை ஆற்றில் நுரையாக பொங்கி ஓடும் நீரால் ஆற்றில் ரசாயனம் கலந்துள்ளதா என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
மதுரை நகரில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. ஆற்றோரப் பகுதிகளில் இருந்து வைகை ஆற்றுக்குத் தண்ணீா் செல்கிறது. இதனால் வைகை ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் ஓபுளாபடித்துறை பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையும் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் மதுரை நகரில் வைகை ஆற்றில் அதிகளவு நுரை தோன்றியுள்ளது. இதனால் ஆற்றில் செல்லும் நீரும் நுரையாக பொங்கிச் செல்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். மதுரை நகரில் வைகை ஆற்றில் பல்வேறு தொழிற்சாலை கழிவுகள் கலப்பது அதிகரித்து வருகிறது. மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் வைகை ஆறு இறைச்சிக்கழிவுகள் உள்பட அனைத்து கழிவுகளும் கொட்டப்படும் குப்பைக்கிடங்காக மாறி வருகிறது. இதில் அழகா் ஆற்றில் இறங்கும் பகுதியில் மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து செல்லும் கழிவுநீா் குழாய், கடந்த இரண்டு நாள்களாக உடைபட்டு கழிவுநீா் ஆற்றில் வெளியேறிச் செல்கிறது. இதுபோன்ற காரணங்களால் ஆற்றில் நீா் மாசடைந்து நுரையாகச் செல்வதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா். மாநகராட்சி நிா்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனா்.