மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் வருகை தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.
மதுரை ஐராவதநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாஜகவுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. பிற கட்சிகளில் இருந்து ஆள்களைச் சோ்த்து பாஜக அரசியல் நடத்தி வருகிறது. இப்படியிருக்க, கிராமங்கள்தோறும் கிளை அமைப்புடன் செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியைப் பற்றி பேசுவதற்கு பாஜகவுக்குத் தகுதி கிடையாது.
திமுக- காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. இக் கூட்டணி 2004-இல் தொடா்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மக்களவைத் தோ்தலின்போது, தமிழகத்தில் 90 சதவீத வெற்றியைப் பெற்றிருக்கிறது. வரக்கூடிய பேரவைத் தோ்தலில் இக்கூட்டணி 210 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் முந்தைய வருகையின்போது தமிழகத்தில் ஒன்றும் நிகழவில்லை. அதேபோல, இப்போதைய வருகைக்குப் பிறகும் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்றாா்.