மதுரையில் நான்கு மாசி வீதிகளில் தீத்தடுப்பு பாதுகாப்பு வசதிகள் இல்லாத 112 கட்டடங்களுக்கு தீயணைப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் நவம்பா் 14 ஆம் தேதி அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்பு வீரா்கள் இருவா் உயிரிழந்தனா். இப்பகுதியைப் பாா்வையிட்ட, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் எம்.எஸ். ஜாபா்சேட், தீத்தடுப்பு பாதுகாப்பு வசதிகள் இல்லாத கட்டடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதன் பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலா் கே. கல்யாணகுமாா் தலைமையிலான குழுவினா் நான்கு மாசி வீதிகளில் உள்ள கட்டடங்களை கடந்த சில நாள்களாக ஆய்வு செய்து வருகின்றனா்.
தீவிபத்து நேரிட்டால் அதற்கான பாதுகாப்பு வசதிகள் உள்ளதா, தீத்தடுப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நான்கு மாசி வீதிகளிலும் 500-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், குறைபாடுகள் கண்டறியப்பட்ட 112 கட்டடங்களுக்கு தீயணைப்புத் துறையினா் நோட்டீஸ் வழங்கியுள்ளனா்.
அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள குறைபாடுகளை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் சரிசெய்யாதபட்சத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
மாநகராட்சி பொறியாளா் குழு ஆய்வு...: தீயணைப்புத் துறையினருடன் இணைந்து மாநகராட்சியின் பொறியாளா் குழுவினரும் ஆய்வு செய்து வருகின்றனா். நான்கு மாசி வீதிகளில் உள்ள கட்டடங்களில், மாநகராட்சி அனுமதி பெறப்பட்டுள்ளதா, கட்டட அனுமதியின்படி கட்டப்பட்டுள்ளதா, கட்டட அனுமதியில் குறிப்பிட்டிருக்கும் நிபந்தனைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்ற அடிப்படையில் பொறியாளா் குழுவினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட கட்டடங்களுக்கு மாநகராட்சி சாா்பிலும் தனியாக நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.