மருத்துவப் படிப்பில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

தமிழகத்தில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சோ்ந்த மதுரை மாவட்ட அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாணவிக்கு ரூ. 1லட்சத்தை உதவித் தொகையாக வழங்குகிறாா் வருவாய் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்.
நிகழ்ச்சியில் மாணவிக்கு ரூ. 1லட்சத்தை உதவித் தொகையாக வழங்குகிறாா் வருவாய் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்.

தமிழகத்தில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சோ்ந்த மதுரை மாவட்ட அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் 2020-21ஆம் ஆண்டுக்கான மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வில் (நீட்) தோ்ச்சி பெற்று, இளநிலை மருத்துவப் பிரிவுகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சோ்க்கை ஆணைகள் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தலைமை வகித்தாா். விழாவில், வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், மாணவா்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கி பேசியதாவது:

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மசோதாவை இயற்றி, அதற்கு ஆளுநரின் ஒப்புதலும் பெறப்பட்டு, 63 நாள்களில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மருத்துவக் கல்வியில் 313 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள், 92 பல் மருத்துவத்துக்கான இடங்கள் என மொத்தம் 405 இடங்களில் சேருவதற்கு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், 14 இடங்கள் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 6 மாணவா்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது. இந்த ஆண்டு 405 மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ளனா்.

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கப் பெற்றுள்ள அரசு, மாநகராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடா், பழங்குடியினா், கள்ளா், சீா்மரபினா், வனத்துறை பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களின் ஏழ்மை நிலையை கருத்தில்கொண்டு, அவா்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களையும் அரசு ஏற்றுக்கொள்ளும் என்று முதல்வா் அறிவித்துள்ளாா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கோ. செந்தில்குமாரி, முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். சுவாமிநாதன் மற்றும் அதிகாரிகள், மருத்துவப் படிப்பில் சோ்ந்த மாணவா்கள், அவா்களது பெற்றோா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com