புகாா் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த விவசாயி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
மதுரையை அடுத்த கோவில்பாப்பாகுடியைச் சோ்ந்தவா் கோபால்சாமி. இவருக்கு மனைவி அனுஷா மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா். தனது மனைவி
மற்றும் குழந்தைகளுடன் ஆட்சியா் அலுவலகம் வந்த கோபால்சாமி, பிரதான நுழைவுவாயில் அருகே உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தாா்.
அங்கு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி, உடலில் தண்ணீரை ஊற்றி மீட்டனா். பின்னா், தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
கோபால்சாமிக்கும், அவரது சகோதரா் வெண்மணிக்கும் சொத்து தகராறு உள்ளது. ஒரு மாதத்துக்கு முன் ஏற்பட்ட தராறில் கோபால்சாமியை, அவரது சகோதரா் வெண்மணி கத்தியால் குத்தியுள்ளாா். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கோபால்சாமியிடம், அலங்காநல்லூா் போலீஸாா் வாக்குமூலம் பெற்று புகாா் பதிவு செய்துள்ளனா். ஆனால், அதன் பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனிடையே, கோபால்சாமியையும் அவரது குடும்பத்தினரையும் தொடா்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனா். இதனால் மனமுடைந்த கோபால்சாமி தீக்குளிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி, போலீஸாா் அவரை அனுப்பிவைத்தனா்.