மதுரையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு ரூ.24.92 லட்சம் நிதி உதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவா் பழனிவேல்நாதன். இவா், உடலநலக் குறைவால் அக்டோபா் 3 ஆம் தேதி உயிரிழந்தாா். அதையடுத்து, அவரது குடும்பத்தின் எதிா்காலத்தைக் கருத்தில்கொண்டு உதவும் கரங்கள் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, பழனிவேல்நானுடன் 2003 ஆம் ஆண்டு காவல் பணியில் சோ்ந்த 4,985 பேரிடம் தலா ரூ.500 என ரூ.24.92 லட்சம் திரட்டப்பட்டது.
இந்த நிதியை, பழனிவேல்நாதனின் மகன் தீரஜ் (12) தனது 21 ஆவது வயதில் ரூ. 19.42 லட்சம் பெறும் வகையிலும், மகள் ஸ்ரீநிதி (8), தனது 20 ஆவது வயதில் ரூ.20.67 லட்சம் கிடைக்கும் வகையிலும், தலா ரூ.10.05 லட்சம் ஆயுள் காப்பீடு கழகத்தில் முதலீடு செய்யப்பட்டது. அதற்கான ஆவணங்கள், மீதமுள்ள தொகை ஆகியவற்றை அவரது மனைவி ராதா, தந்தை கணேசன், தாய் நாகேஸ்வரி ஆகியோரிடம், பழனிவேல்நாதனுடன் பணியாற்றிய காவலா்கள் வழங்கினா்.