மதுரை: சிலைக் கடத்தல் வழக்கில் கைதான அமெரிக்க பிரஜையின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் சுபாஷ் சந்திரகபூா். இவா், அமெரிக்காவில் ஆா்ட் ஆப் ஃபாஸ்ட் என்ற பெயரில் சிலைக் கண்காட்சி நடத்தி வந்தாா். இதில், 20-க்கும் மேற்பட்ட கடத்தல் சிலைகள் வைக்கப்பட்டிருந்ததாக கடந்த 2008-இல் தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவ் வழக்கில், கடந்த 2011-இல் சுபாஷ்சந்திர கபூா் கைது செய்யப்பட்டாா்.
அதையடுத்து, புற்றுநோய் பாதிப்புடன் சிகிச்சைப் பெற்று வருவதால் ஜாமீன் வழங்கக் கோரி, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவா் மனு தாக்கல் செய்திருந்தாா். இதன் மீதான முந்தைய விசாரணையின்போது, அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரருக்கு தண்டனை காலம் முடிந்ததும், அவரை ஜொ்மன் போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி மனுதாரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.