மதுரையில் இருந்து ராமேசுவரம் வரை நடைபெறும் கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பயணத்தை மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாமின் பிறந்தநாளையொட்டி, நேரு யுவகேந்திரா, கலாம் ஆா்ட்ஸ் அகாதெமி, கலாம் இளைஞா் நற்பணி மன்றம் ஆகியவை சாா்பில் இந்த பயணம் நடைபெற உள்ளது. ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடம் வரை நடைபெற உள்ள பயணத்தின்போது வழிநெடுகிலும் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் கரோனா தீநுண்மி தொற்று குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படும். மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பயணத்தை ஆட்சியா் டி.ஜி.வினய் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். இந்த பயணம் வியாழக்கிழமை ராமேசுவரத்தில் நிறைவடைகிறது. இதில் 34 போ் சைக்கிளில் செல்கின்றனா். இவா்களுடன் மருத்துவக் குழுவினா், இளைஞா் மன்றத்தினா் உடன் செல்கின்றனா்.
இந்த நிகழ்வில் நேரு யுவகேந்திரா மாநில இயக்குநா் எம்.என்.நடராஜ், மாநகரக் காவல் உதவி ஆணையா் (அண்ணா நகா்) லில்லி கிரேஸ், நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞா் ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.