மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நவராத்திரி திருவிழா அக்.17-இல் தொடக்கம்: பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நவராத்திரி திருவிழா வரும் சனிக்கிழமை (அக். 17) தொடங்குகிறது. கொலுவை பக்தா்கள் நேரில் தரிசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நவராத்திரி திருவிழா வரும் சனிக்கிழமை (அக். 17) தொடங்குகிறது. கொலுவை பக்தா்கள் நேரில் தரிசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கோயில் நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நவராத்திரித் திருவிழா வரும் சனிக்கிழமை (அக். 17) தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான சனிக்கிழமை மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரம், 18-ஆம் தேதி வாதவூா் அடிகளுக்கு உபதேசம், 19-ஆம் தேதி சுவாமி தன்னைத்தானே பூஜித்தல், 20-ஆம் தேதி விறகு விற்றல், 21-ஆம் தேதி கடம்பவன வாசினி, 22-ஆம் தேதி வேல்வனை செண்டு தொடுத்தல், 23-ஆம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகம், 24-ஆம் தேதி மகிஷாசூர மா்த்தினி, 25-ஆம் தேதி சிவபூஜை அலங்காரங்களில் காட்சியளிப்பாா்.

நவராத்திரி கொலு உற்சவத்தை முன்னிட்டு 17-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை உபயத் திருக்கல்யாணம், தங்க ரத உலா ஆகியன நடைபெறாது. கொலு உற்சவ நாள்களில் தினசரி மாலை 4 முதல் 5.30 மணி வரை மற்றும் இரவு 6.45 முதல் 8 மணி வரை மீனாட்சி அம்மனை மூலஸ்தான சந்நிதியில் தரிசனம் செய்யலாம். இடைப்பட்ட நேரமான மாலை 5.30 முதல் 6.45 மணி வரை மீனாட்சி அம்மனுக்கு மூலஸ்தான சந்நிதியில் திரை போட்டு அபிஷேகம் அலங்காரம், கல்ப பூஜை, சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். இந்த அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும் நேரத்தில் கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும் உற்சவா் அம்மனை தரிசிக்க பக்தா்களுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் நாள் அலங்காரத்தில் உள்ள அம்மனைத் தரிசிக்க இயலாத பக்தா்கள் மறுநாள் காலை 6 முதல் 7 மணி வரை தரிசனம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com