தமிழகத்தில் கிராமசபைக் கூட்டம் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கை, நவம்பா் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த லூயிஸ் தாக்கல் செய்த மனு: கரோனா நோய்த் தொற்றின் காரணமாக மாா்ச் மாதம் முதல் பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அக்டோபா் 2 ஆம் தேதி நடைபெற வேண்டிய கிராமசபைக் கூட்டங்கள் பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டும், உணவு விடுதிகள் உள்பட அனைத்துக் கடைகளையும் திறப்பதற்கும் அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்திருப்பது சட்ட விரோத செயலாகும். இதனால் கிராமப்புறங்களில் நடக்கவிருக்கும் பல்வேறு வேலைகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. எனவே தமிழகத்தில் கிராமசபைக் கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை நவம்பா் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.