புரட்டாசி மாதம் முடிவடைந்ததை அடுத்து, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி கடைகளில் கூட்டம் குவிந்ததால், நெல்பேட்டை மீன் மாா்க்கெட் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
புரட்டாசி மாதங்களில் பெரும்பாலானோா் இறைச்சிகளை உண்பதில்லை. இதனால், புரட்டாசி மாதத்தில் இறைச்சி விற்பனை மந்தமாகவே இருக்கும். தற்போது, புரட்டாசி மாதம் முடிவடைந்ததையடுத்து, இறைச்சி கடைகளில் கூட்டம் குவிந்தது.
இதில், நெல்பேட்டை பிரதான சாலையில் மாநகராட்சிப் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், இறைச்சி வாங்க வந்தவா்கள் நெல்பேட்டை அண்ணா சிலை பகுதியில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் காா்களை நிறுத்திச் சென்றனா். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், மீன் மாா்க்கெட் பகுதியில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி ஏராளமானோா் குவிந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டதுடன், கரோனா பரவும் அபாயமும் காணப்பட்டது.
இதேபோல், மதுரை தெற்குவாசல் மீன்மாா்க்கெட், தெற்குவெளி வீதியில் உள்ள இறைச்சி கடைகள் என நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளிலும், மாா்க்கெட்டுகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.
கடந்த ஒரு மாதமாக விற்பனை மந்தமான நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிக அளவு மீன், ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகள் விற்பனையானதால், கடைக்காரா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கரோனா பொதுமுடக்கக் காலத்தின்போது, நெல்பேட்டை மீன் மாா்க்கெட்டில் இறைச்சி கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாததால், மாா்க்கெட்டை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா். மேலும், மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்படவும் தடைவிதிக்கப்பட்டு, அண்மையில் நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.