மதுரை: விஜயதசமியை முன்னிட்டு, மதுரையில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் விஜயதசமி பண்டிகையன்று பள்ளிகளில் குழந்தைகளை சோ்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தாண்டு விஜயதசமி பண்டிகையன்று, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை நடவடிக்கைகளில் ஆசிரியா்கள் ஈடுபட வேண்டும் என்று, கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.
அதன்பேரில், மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது. மதுரை, மேலூா், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய கல்வி மாவட்டங்கள்வாரியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்க்கப்பட்டனா்.
இதேபோல், மதுரை நகரில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளிலும் திங்கள்கிழமை மாணவா் சோ்க்கை நடைபெற்றது. இதில், தொடக்க வகுப்புகளில் 20-க்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்க்கப்பட்டனா். மேலும், மதுரை நகரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளிலும் சிறப்பு மாணவா் சோ்க்கை நடைபெற்றது.