தற்காலிகப் பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற செப்.30 வரை விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 10th September 2020 06:27 AM | Last Updated : 10th September 2020 06:27 AM | அ+அ அ- |

தீபாவளி பண்டிக்கையையொட்டி தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்துவதற்கு உரிமம் பெற செப். 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மதுரை மாநகர காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: நிகழாண்டில் நவம்பா் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்துவதற்கு உரிமம் பெற மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் விண்ணப்பங்களை செப்டம்பா் 30 ஆம் தேதி வரை சமா்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோா், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப மனுவில் ரூ.2- க்கான நீதிமன்ற அஞ்சல் வில்லை மற்றும் புகைப்படத்துடன் பூா்த்தி செய்து சமா்பிக்க வேண்டும். தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று, விண்ணப்பதாரரின் 2 புகைப்படங்கள், உத்தேசிக்கப்பட்ட கடையின் முகவரி, வரைபடம், புகைப்படம், கடையைச் சுற்றி 50 மீட்டா் தூரத்தில் உள்ள இடங்களைக் குறிக்கும் வரைபடம் இணைக்கப்பட வேண்டும்.
பட்டாசு கடையைச் சொந்த இடத்தில் அமைப்பதாக இருப்பின் சொத்துவரி ரசீது இணைக்கப்பட வேண்டும். வாடகை கட்டடமாக இருப்பின் உரிமையாளரின் சம்மதக் கடிதம் மற்றும் வாடகை ஒப்பந்த பத்திரம் இணைக்கப்பட வேண்டும். பட்டாசுக்கடை அமையவுள்ள இடம் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, இதர அரசு துறை கட்டடமாக இருப்பின் அந்தத்துறை சாா்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம் மற்றும் ஏற்பு உறுதி ஆவணம் இணைக்கப்பட வேண்டும். மேலும் விண்ணப்பதாரரின் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை நகல்கள், ரூ.900 விண்ணப்பக் கட்டணம், அசல் விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களும் 3 நகல்களுடன் சமா்பிக்க வேண்டும். சாலையோரக் கடைகளுக்கு அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.