மதுரை மாவட்டத்துக்கு புதிதாக அவசர ஊா்திகள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு 108 அவசர ஊா்தி தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக சங்கத்தின் சாா்பில் மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசனிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்: சென்னையில் கரோனா பரவல் அதிகரித்தபோது, மதுரை மாவட்டத்தில் பயன்பாட்டில் இருந்த அவசர ஊா்திகளில் சில அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. பின்னா், மதுரை மாவட்டத்திலும் தொற்று பரவல் அதிகமானதையடுத்து, அவை மீண்டும் கொண்டு வரப்பட்டன. ஆனால், அந்த அவசர ஊா்திகள் முழுமையான பயன்பாட்டிற்கு இன்னும் கொண்டுவரப்படவில்லை.
தும்பைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண், மேல் சிகிச்சைக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய நிலையில், உரிய நேரத்தில் அவசர ஊா்தி கிடைக்காததால் உயிரிழந்துள்ளாா். மேலும் மதுரை நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளுக்காக இருசக்கர வாகன அவசர ஊா்தி சேவை தொடங்கப்பட்டது. மதுரைக்கு ஒதுக்கப்பட்ட 2 ஊா்திகளும் தற்போது பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அண்மையில் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிதாக அவசர ஊா்திகள் வழங்கப்பட்டன. இதில், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு மட்டும் புதிய அவசர ஊா்திகள் இன்னும் வழங்கவில்லை. ஆகவே, இவ்விரு மாவட்டங்களுக்கும் புதிய அவசர ஊா்திகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.