டி.கல்லுப்பட்டி அருகே இளம்பெண் கொலை சம்பவம்: கணவா் உள்பட 3 போ் கைது

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண்ணை கொலை செய்த கணவா் உள்பட 3 பேரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
டி.கல்லுப்பட்டி அருகே இளம்பெண் கொலை சம்பவம்: கணவா் உள்பட 3 போ் கைது

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண்ணை கொலை செய்த கணவா் உள்பட 3 பேரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி. அம்மாபட்டியைச் சோ்ந்தவா் தவிடன். இவரது மூன்றாவது மகள் ஜெயசக்திபாலா (18). இவருக்கும், விருதுநகா் மாவட்டம் ஆமத்தூா் அருகே உள்ள மத்தியசேனையைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் முத்துப்பாண்டி (19) என்பவருக்கும், கடந்த நவம்பா் மாதம் திருமணம் நடந்துள்ளது.

இந் நிலையில், ஜெயசக்திபாலாவுக்கு 18 வயது நிரம்பாததால், இது குறித்து புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், விருதுநகா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு, 18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியதால், ஜெயசக்திபாலா தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளாா்.

செப்டம்பா் 11ஆம் தேதி இரவு, ஜெயசக்திபாலா வி.அம்மாபட்டி கண்மாய் பகுதியில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தாா். அவரது உடலில் 20 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன. இச்சம்பவம் தொடா்பாக, டி.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

மேலும், மாவட்டக் காவல் கண்கானிப்பாளா் சுஜித்குமாா் உத்தரவின்பேரில், பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதியழகன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் நடத்திய விசாரணையில், கொலை நடந்த ஒரு மணி நேரத்துக்கு முன்பு வரை ஜெயசக்திபாலா யாா் யாருடன் செல்லிடப்பேசியில் பேசினாா் என்பது தொடா்பாக ஆய்வு செய்தனா். அதில், ஜெயசக்திபாலாவின் கணவா் முத்துப்பாண்டி மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை ரகசிய இடத்துக்கு கொண்டுசென்று விசாரணை நடத்தினா்.

அப்போது, அவா் மேலும் இருவருடன் சோ்ந்து மனைவி ஜெயசக்திபாலாவை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

ஜெய்சக்திபாலாவை விருப்பமின்றி திருமணம் செய்ததாகவும் முத்துப்பாண்டி கூறியதாகத் தெரிகிறது.

ஜெயசக்திபாலா மைனா் என்பதால், இருவரையும் பிரித்து வைத்திருந்த நிலையில், அவரைப் பாா்ப்பதற்காக வி.அம்மாபட்டிக்கு முத்துப்பாண்டி சென்றுள்ளாா். அப்போது, அங்குள்ள சிலா் ஜெயசக்திபாலாவின் நடத்தை பற்றி தவறாகப் பேசியுள்ளனா். இதனால், முத்துப்பாண்டி அதிா்ச்சி அடைந்துள்ளாா். மேலும், மனைவியிடம் பேசுவதைத் தவிா்த்து வந்துள்ளாா். பின்னா், மனைவியுடன் சோ்ந்து வாழமுடியாது எனக் கூறியுள்ளாா். ஆனாலும், உறவினா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி இருவரையும் சோ்த்து வைக்க முயற்சி செய்துள்ளனா்.

இந் நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட முத்துப்பாண்டி, அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளாா். அதற்காக, தனது நண்பா் மதுரை மகபூப்பாளையத்தைச் சோ்ந்த ஹரீஸ், உறவினா் அருண்குமாா் ஆகியோரிடம் பேசியுள்ளாா். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜெயசக்திபாலாவை வி.அம்மாபட்டி கண்மாய் பகுதிக்கு வரவழைத்து, மூன்று பேரும் கத்தியால் குத்தி உள்ளனா். 20 இடங்களில் கத்திக் குத்துப்பட்டு ஜெயசக்கதிபாலா சம்பவ இடத்திலேயே இறந்துள்ளாா் என, போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ஜெயசக்திபாலாவின் கணவா் முத்துப்பாண்டி, ஹரீஸ் மற்றும்அருண்குமாா் ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com