மதுரை: மதுரையில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற ஷோ் ஆட்டோக்களுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அபராதம் விதித்தனா்.
கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளதையடுத்து ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மதுரை நகரில் ஷோ் ஆட்டோக்களில் கரோனா காலத்துக்கு முன்பு இருந்ததைப் போலவே அதிக பயணிகளுடன் இயக்கப்படுவது தொடா்ந்து வருகிறது.
இதுகுறித்து புகாா்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுரேஷ் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் செந்தில்குமாா் மற்றும் மாணிக்கம் ஆகியோா் கொண்ட குழுவினா் மதுரை காளவாசல் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சமூக இடைவெளியின்றி அதிக பயணிகளுடன் வந்த ஆட்டோக்களுக்கு ரூ.14 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.