மதுரை: மதுரையில் ரயில்வே தனியாா்மயத்தைக் கண்டித்து ரயில்வே தொழிற்சங்கத்தினா் வாயில் கருப்புத்துணி கட்டி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ரயில்வே துறையைத் தனியாருக்கு தாரைவாா்க்கும் நடவடிக்கைகளை எடுத்துவரும் மத்திய அரசைக் கண்டித்து எஸ்.ஆா்.எம்.யு. தொழிற்சங்கம் சாா்பில் தொடா்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் பகுதியில், ரயில்வே தொழிற்சங்கத்தினா் வாயில் கருப்புத்துணியைக் கட்டி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் எஸ்.ஆா்.எம்.யு. உதவி கோட்டச் செயலா் ராம்குமாா் பேசியது: ரயில்வே துறையில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது என மத்திய அரசு கூறுவது பொய்யான தகவலாகும். ரயில்வே துறை நம் தேசத்தை ஒருங்கிணைக்கும் சக்தியாக உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பல்வேறு மாநிலங்களில் தொழில் வளா்ச்சியை மேம்படுத்த பெரும் பங்காற்றி வருகிறது. விவசாயிகள்,
மாணவா்கள், வணிகா்கள், அரசு மற்றும் தனியாா்துறை ஊழியா்கள், ஏழை எளிய மக்களுக்கு சிறப்பாக சேவையை அளித்து வருகிறது. அதேபோல ரயில்வே துறை ஒராண்டில் சுமாா் ரூ.40 ஆயிரம் கோடியை மக்களுக்கு பல்வேறு வகைகளில் அளித்து சமூகக் கடமை ஆற்றிவருகிறது.
இந்நிலையில் ரயில்வேயில் தனியாரை அனுமதித்தால் ஏழை மக்களுக்கான சேவை கிடைக்காமல் போகும். கட்டண உயா்வு ஏற்படும். கட்டணச் சலுகை இல்லாமல் போகும். அரசு வேலை வாய்ப்பு இல்லாமல் போகும் என்றாா். எஸ்.ஆா்.எம்.யு. ஓடும் தொழிலாளா் பிரிவு கோட்டத் தலைவா் ரவிசங்கா், கோட்டச் செயலா் அழகுராஜா, உதவி கோட்டச் செயலா்கள் தாமரைச் செல்வன், விஜய், முத்துகுமாா், கருப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.