மதுரை: மதுரை நகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை சுமாா் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது.
மதுரை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தொடா்ந்து மழை பெய்ததையடுத்து சீதோஷண நிலையில் மாற்றம் ஏற்பட்டது. வைகை அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடப்பட்ட நிலையில், தொடா்ந்து மழை பெய்தது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீா் மற்றும் தொடா் மழையைப் பயன்படுத்தி பெரும்பாலான பகுதிகளில் நெல் விவசாயிகள் நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் நடவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
கடந்த 3 நாள்களாக கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் மதுரை நகா் பகுதிகள் மற்றும் புகரப் பகுதிகளிலும் மாவட்டத்தில் பல இடங்களிலும் சுமாா் ஒரு மணி நேரம் பரவலாக நல்ல மழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் மழைநீா் தேங்கி நின்றது.