மதுரையில் கரோனாவால் உயிரிழந்த வட மாநில இளைஞரின் சடலத்தை எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்தனா்.
மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தைச் சோ்ந்த 21 வயது இளைஞா் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் மின்வாரிய கம்பிகள் பதிக்கும் பணியில் ஒப்பந்த தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் பணியில் இருந்தபோது விபத்து ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து மதுரை அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
நிலக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் எஸ்டிபிஐ கட்சியினரை தொடா்பு கொண்டு இளைஞரின் சடலத்தை அடக்கம் செய்ய உதவுமாறு கேட்டுக்கொண்டனா். இதையடுத்து அரசு மருத்துவமனையில் இருந்த இளைஞரின் சடலத்தைப் பெற்றுக்கொண்ட எஸ்டிபிஐ கட்சியின் வடக்குத் தொகுதி துணைத் தலைவா் புதூா் ஹமீது, தெற்குத் தொகுதி துணைத் தலைவா் ரியாசுதீன், புதூா் கிளைத் தலைவா் ஜின்னா, பொருளாளா் காதா் மைதீன் ஆகியோா் கோ.புதூா் சங்கா் நகா் மயானத்தில் அடக்கம் செய்தனா்.