மதுரையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 587 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.
மதுரை தெற்குமாசி வீதியில் குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, போலீஸாருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸாா் தெற்குமாசி வீதி, நவபத்கானா தெருவில் உள்ள வீடு ஒன்றில் சோதனை செய்தனா். அப்போது வீட்டில் சட்டவிரோதமாக 56 மூட்டைகள் மற்றும் 7 அட்டை பெட்டிகளில் குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து காவல் ஆய்வாளா் அனுராதா அளித்தப் புகாரின் பேரில் தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து மலையரசு (39) என்பவரை கைது செய்து, 587 கிலோ குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
326 மதுபாட்டில்கள் பறிமுதல்
மதுரை மாநகா் மதுவிலக்கு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவனியாபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட எம்.எம்.சி காலனியில் சட்டவிரோதமாக மதுபாட்டிகளை விற்பனை செய்த கண்ணன் (41) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான 326 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.