டி.கல்லுப்பட்டி அருகே 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
டி.கல்லுப்பட்டி அருகே 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே.ராஜகுரு, மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் து.முனீஸ்வரன், வழக்குரைஞா் மோ.நாகபாண்டியன், வி.சிவகுமாா் ஆகியோா், தே.கல்லுப்பட்டி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டிருந்தனா். இதில் தேவன்குறிச்சி ஈஸ்வரப்பேரி கண்மாய் மடையில் இருந்த பழைமையான கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது: டி.கல்லுப்பட்டியின் அடையாளமாகத் திகழ்வது தேவன்குறிச்சி மலை. இம்மலையின் வடகிழக்குப் பகுதியில் ஈஸ்வரப்பேரி என்ற கண்மாய் உள்ளது. மலைச்சரிவில் இயற்கையாக அமைந்த பாறையை வெட்டி இக்கண்மாய்க்கு மடை அமைத்துள்ளனா். இதில் நீா் வெளியேற மூன்று கண் மடை அமைப்பு உள்ளது. இதன் முதல் கண்ணில், தரையில் பதிக்கப்பட்டுள்ள 3 அடி நீளமும், 1 அடி அகலமும் உள்ள ஒரு கல்லில் 7 வரிகள் கொண்ட கல்வெட்டு உள்ளது.

நீா் வழிந்தோடும் இடத்தில் இருந்ததால் இக்கல்வெட்டின் பல சொற்கள் அழிந்த நிலையில் உள்ளன.

‘ஸ்வஸ்திஸ்ரீ’ எனத்தொடங்கும் இக்கல்வெட்டு பாடல் போன்ற வடிவில் அமைந்துள்ளது. ‘கலிங்கத்தரையா் பெயா் கொண்ட பெருங்குன்றைப் பெரியகுளம்’ என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்கண்மாய் மற்றும் மடை கலிங்கத்தரையரால் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாகக் கருதலாம். கலிங்கத்தரையா் என்பவா்கள் பிற்காலப் பாண்டியா் ஆட்சிக்காலத்தில் கி.பி.12, 13 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த குறுநிலத் தலைவா்கள் ஆவா். கல்வெட்டில் சொல்லப்படும் கலிங்கத்தரையா் இப்பகுதியில் இருந்த குறுநிலத் தலைவராக இருக்கலாம். இக்கண்மாய் அமைத்த அவருடைய சிறப்பை கல்வெட்டு விவரிக்கிறது. இதில் மன்னா் பெயா் அழிந்துள்ளது. கல்வெட்டில் காா் கொண்ட நிறத்தான், இன்னோசை, கடலிடத்தே போன்ற சொற்களும் வருகின்றன.

இம்மடையின் மேற்குப் பகுதியில் உள்ள பாறையில் திரிசூலம், சூரியன், சந்திரன், பாண்டியரின் செண்டுக்கோல் ஆகியவை கோட்டோவியமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மடையை அமைத்துக் கொடுத்து, சந்திரனும் சூரியனும் இருக்கும் வரைக்கும் இந்த தா்மம் நிலைத்திருக்கும் என்பதன் அடையாளமாக இச்சின்னங்கள் இடப்பட்டுள்ளன.

தேவன்குறிச்சி அக்னீஸ்வரா் கோயிலில் உள்ள முதலாம் மாறவா்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சோ்ந்த துண்டுக் கல்வெட்டுகளில் இவ்வூா் செங்குடி நாட்டு பெருங்குன்றத்தூா் எனவும், இங்குள்ள குன்று பெருங்குன்றம் எனவும், இவ்வூா் கண்மாய் பெரியகுளம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் ‘பெருங்குன்றைப் பெரியகுளம்’ என சொல்லப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com