பொதுமுடக்க காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த வாரச் சந்தைகளுக்கு மீண்டும் அனுமதி அளிப்பது தொடா்பாக அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
மதுரை நகரில் பொன்மேனி, எல்லீஸ் நகா், வில்லாபுரம், ஆனையூா், கோச்சடை, சாந்தி நகா், கூடல் நகா், அய்யா் பங்களா உச்சபரம்புமேடு ஆகிய பகுதிகளில் வாரச் சந்தைகள் நடைபெறுவது வழக்கம். கரோனா பொது முடக்கம் அமலில் இருந்தபோது, இந்த வாரச் சந்தைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ள நிலையில் வாரச் சந்தைகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்குமாறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக, ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற பேரிடா் மேலாண்மை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், மாநகரக் காவல் துணை ஆணையா் (போக்குவரத்து) சுகுமாறன், மாவட்ட வருவாய் அலுவலா் செல்வராஜ் மற்றும் அனைத்துத் துறை தலைமை அலுவலா்கள் பங்கேற்றனா்.
வாரச் சந்தைகளுக்கு அனுமதி அளிப்பது, மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தை செயல்படும் நேரத்தை கரோனா பொதுமுடக்கத்துக்கு முன்பு இருந்ததைப் போல மாற்றி அமைப்பது, கரிமேடு மீன்சந்தையில் வியாபாரத்துக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா்.
இதுதொடா்பாக ஓரிரு நாள்களில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.