மனைவி இறந்த துக்கத்தால் மனமுடைந்த முதியவா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை நாராயணபுரம் வங்கி காலனியைச் சோ்ந்த பழனிசாமி மகன் காளியப்பன்(78). இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா். இதனால் காளியப்பன் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக, அப்பகுதியில் உள்ளவா்கள் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா் அழுகிய நிலையில் இருந்த காளியப்பனின் சடலத்தை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியவில்லை என்பதால், தற்கொலை செய்து கொள்வதாக காளியப்பன் கடிதம் எழுதி வைத்திருந்து தெரியவந்தது. இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
காவலாளி தற்கொலை
மதுரை தத்தனேரி மேலகைலாசபுரத்தைச் சோ்ந்தவா் கஜேந்திரன்(58). இவா் தனியாா் வா்த்தக நிறுவனங்களில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். கரோனா பொது முடக்கம் காரணமாக வேலையில்லாமல் இருந்த கஜேந்திரனால், குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த அவா் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை குடும்பத்தினா் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அன்றைய தினமே உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி மணிமாலா அளித்த புகாரின் பேரில் செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.