கரூா் மாவட்டம் குளித்தலை அருகே மயானத்திற்குச் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த குமாா் தாக்கல் செய்த மனு:
குளித்தலை அருகே வடசேரி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட நாவலக்காபட்டியில் மண்பாண்டம் தொழில் செய்யும் 30 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்கள் மயானத்திற்கு செல்வதற்காக பயன்படுத்தி வந்த நத்தம் புறம்போக்கு இடத்தை சிலா் ஆக்கிரமித்துள்ளனா். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு, இம்மனுவுக்கு கரூா் மாவட்ட ஆட்சியா், குளித்தலை வட்டாட்சியா், வடசேரி ஊராட்சித் தலைவா், தோகைமலை காவல் ஆய்வாளா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.