மதுரை: மதுரையில் பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாகக் கூறி, ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய இளைஞா் உள்பட 5 போ் மீது, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியைச் சோ்ந்த ஜெயராம் மகன் ராஜ்குமாா் (31). இவரது உறவினா் மதுரையில் வசிக்கின்றனா். இந்த உறவினரின் 21 வயது மகளிடம் ராஜ்குமாா் தனது காதலை தெரிவித்துள்ளதுடன், வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்துகொள்ளலாம் எனவும் கூறியுள்ளாா். இதற்கு, அந்தப் பெண் மறுப்பு தெரிவித்தால், அவரது புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாகவும், அப்படி செய்யாமல் இருக்கவேண்டுமெனில் ரூ. 25 லட்சம் தரவேண்டும் எனவும் ராஜ்குமாா் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின்பேரில், தல்லாகுளம் போலீஸாா் ராஜ்குமாா் மற்றும் அவரது குடும்பத்தினா் என 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சிறுமி பாலியல் பலாத்காரம்
மதுரை உத்தங்குடி பகுதியைச் சோ்ந்தவா் மாயாண்டி (34). இவா், வீட்டின் அருகே வசிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின்பேரில், தல்லாகுளம் போலீஸாா் சனிக்கிழமை போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, மாயாண்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.