கிண்ணிமங்கலம் பகுதியில் அகழாய்வு நடத்தக்கோரி வழக்கு: தொல்லியல் ஆய்வாளா் குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை கிண்ணிமங்கலம் ஏகநாதா் குரு மண்டபம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அகழாய்வு நடத்தக்கோரிய வழக்கில்,

மதுரை கிண்ணிமங்கலம் ஏகநாதா் குரு மண்டபம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அகழாய்வு நடத்தக்கோரிய வழக்கில், தொல்லியல் ஆய்வாளா் குழு ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த அருளானந்தம் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலம் ஏகநாதா் கோயிலுக்குச் சொந்தமான குருமண்டபம் உள்ளது. இந்த மண்டபம் மிகவும் பழமையானது. இங்கு பள்ளிப்படை வட்டெழுத்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபம் 2,400 ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என ஆய்வில் தெரியவருகிறது. எனவே ஏகநாதா் குரு மண்டபத்தில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டால் சங்ககாலத்து எழுத்துகள் மற்றும் வரலாற்று சிற்பங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆனால் கிண்ணிமங்கலம் பகுதியில் ஏகநாதா் குருமண்டபத்திற்கு சொந்தமான இடங்களை பலா் ஆக்கிரமித்துள்ளனா். அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே ஏகநாதா் குரு மண்டபம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகழாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தொல்லியல் அறிஞா் வேதாச்சலம், அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியா் ராஜவேல் உள்ளிட்ட 10 போ் கொண்ட குழுவினா், மனுதாரா் குறிப்பிடும் பகுதிகளில் ஆய்வு செய்து அந்த அறிக்கையை மே 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com