மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்புள்ள தெருக்களை அடைக்க மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் உத்தரவிட்டுள்ளாா்.
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையொட்டி கரோனா தொற்றுத் தடுப்புப் பரவல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் கரோனா பாதிப்புள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கரோனா பாதிப்பு அதிகமுள்ள 20 வாா்டுகளை தோ்ந்தெடுத்து கரோனா பரிசோதனை முகாம்களை அதிகரிக்க வேண்டும். கரோனா தொற்று நோயாளிகள் உள்ள தெருக்களை ஏற்கெனவே பின்பற்றப்படும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி அடைத்து அப்பகுதி மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல், கபசுரக் குடிநீா் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவதை கண்காணிக்க வேண்டும். மாநகராட்சியின் 31 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் பொதுமக்கள் காய்ச்சல் தொடா்பான சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மாநகராட்சி அழைப்பு மைய எண் 842 842 5000 என்ற எண்ணை தொடா்புகொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா் சங்கீதா, நகரப்பொறியாளா் அரசு, நகா்நல அலுவலா் குமரகுருபரன் மற்றும் சுகாதார அலுவலா்கள் பங்கேற்றனா்.