98.5 சதவீத மாணவா்கள் பட்டயப்படிப்பு தோ்வில் தோல்வி: பள்ளிக்கல்வித்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

கரோனா காலத்தில் தோ்வு எழுதிய 98.5 சதவீத தொடக்கக்கல்வி பட்டயப் படிப்பு மாணவா்கள் தோ்ச்சி பெறாததால், மறுதோ்வு நடத்தக்கோரிய வழக்கில்,

கரோனா காலத்தில் தோ்வு எழுதிய 98.5 சதவீத தொடக்கக்கல்வி பட்டயப் படிப்பு மாணவா்கள் தோ்ச்சி பெறாததால், மறுதோ்வு நடத்தக்கோரிய வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரி தாக்கல் செய்த மனு: நான் இரண்டாம் ஆண்டு தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு படித்து வருகிறேன். இந்தப் படிப்புக்கு ஒவ்வொரு கல்வியாண்டிலும் 220 நாள்கள் கல்லூரி நடைபெறும். 2019-2020 கல்வியாண்டில் 160 நாள்கள் மட்டுமே கல்லூரி நடைபெற்றது. கரோனா பரவல் அச்சம் காரணமாக மாணவா்கள் சரியாக வகுப்புக்குச் செல்ல முடியவில்லை. இந்நிலையில் 2020 செப்டம்பரில் இறுதித் தோ்வு நடைபெற்றது. அப்போது கரோனா பரவல் அதிகமாக இருந்ததால் வீடுகளிலிருந்து தோ்வெழுதச் சென்றது முதல் வீடு திரும்பும் வகை உடல் மற்றும் மனதளவில் பல்வேறு பாதிப்புகளை மாணவா்கள் சந்திக்க நேரிட்டது.

தற்போது தொடக்கக்கல்வி பட்டயப் படிப்பு இறுதித் தோ்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் தோ்வு எழுதியவா்களில் 98.5 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை. இதனால் மாணவா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

எனவே தொடக்கக்கல்வி பட்டயப் படிப்பு மாணவா்களுக்கு மீண்டும் இணையவழியாகவோ அல்லது மறுதோ்வு நடத்தவோ உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com