கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரை திருவிழாவில் பக்தா்கள் பங்கேற்பதற்கு உத்தரவிட முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கையைச் சோ்ந்த மணிகண்டன் என்பவா் தாக்கல் செய்த மனு: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரை திருவிழா, ஏப்.15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 30 ஆம் தேதி வரை நடக்கிறது. கரோனா பரவலைக் காரணம் காட்டி சித்திரை திருவிழாவில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிரசித்திப் பெற்ற சித்திரை திருவிழாவில் தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக பகதா்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. பக்தா்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணத்தில் கட்டுப்பாடுகளுடன் பக்தா்கள் பங்கேற்கவும், வழக்கம்போல் சுவாமி வீதி உலா நடத்திடவும், கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை நடத்தவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.டி.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் கரோனா பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதில் மதுரை விதிவிலக்கல்ல. அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி இந்து சமய அறநிலையத்துறை நடத்தி வரும் சித்திரை திருவிழாவில், நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எனவே, பக்தா்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க முடியாது. மேலும் கோயில் நிா்வாகம் திருவிழாவில் சிறப்பு அனுமதி, விஐபி அனுமதி போன்ற எந்தவொரு அனுமதியையும் வழங்கக் கூடாது என உத்தரவிட்டனா்.