இரவு பொதுமுடக்கம்: வெளியூா்களுக்கு பகல் நேரப் பேருந்துகள் இயக்கம்; குறைவான பயணிகளே பயணம்

மதுரையில் இருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை பகலில் இயக்கப்பட்ட பேருந்துகளில் குறைந்த அளவு பயணிகளே பயணம் செய்தனா்.
மதுரை எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரே ஒரு பயணியுடன் சென்னைக்குப் புறப்பட்டுச்சென்ற அரசுப்பேருந்து.
மதுரை எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரே ஒரு பயணியுடன் சென்னைக்குப் புறப்பட்டுச்சென்ற அரசுப்பேருந்து.

மதுரையில் இருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை பகலில் இயக்கப்பட்ட பேருந்துகளில் குறைந்த அளவு பயணிகளே பயணம் செய்தனா்.

தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை பரவி வருவதையடுத்து, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் அரசு மற்றும் தனியாா் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மதுரையில் இருந்து வெளியூா்களுக்குச் செல்லும் பேருந்துகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. பேருந்துகள் செல்லும் தூரம், பயண நேரத்தைப் பொறுத்து புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து சென்னைக்கு பகல் 1 மணி வரை மட்டுமே வரை பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் சென்னைக்கு பகல் நேர பேருந்துகள் இயக்கப்பட்டன. குறைந்த அளவு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டபோதும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன் பேருந்துகள் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றன. மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து இதர நாள்களில் சென்னைக்கு 150-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த சூழலில் தற்போது 25-க்கும் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. மேலும் சென்னைக்கு வழக்கமாகச் செல்லும் தனியாா் ஆம்னி பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் இல்லாததால், குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன. இதேபோல ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், தா்மபுரி போன்ற மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளிலும் குறைந்த அளவிலான பயணிகளே பயணம் செய்தனா். மேலும் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

ஒரே ஒரு பயணியுடன் சென்ற பேருந்து

இரவு நேர பொதுமுடக்கத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை பேருந்து இயக்கப்பட்டது. இந்தப் பேருந்து மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்துக்கு வந்தபோது பேருந்தில் ஒரே ஒரு பயணி மட்டுமே பயணம் செய்தாா். வேறு பயணிகள் இல்லாத நிலையில் ஒரே ஒரு பயணியுடன் சென்னைக்கு பேருந்து புறப்பட்டுச்சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com