மதுரை மண்டலத்திற்கு 63 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக சுகாதாரத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 746 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் தொடங்கிய கரோனா தடுப்பூசித் திட்டத்தில் இதுவரை 1லட்சத்து 85 ஆயிரத்து 644 போ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனா். தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கிடங்கு ஆகியவற்றில் மொத்தம் 2,740 தடுப்பூசிகள் இருப்பு உள்ளன.
மதுரை மண்டலத்தில், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி போட வந்தவா்கள் ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனா். இந்நிலையில் மத்திய அரசு தொகுப்பில் இருந்து கூடுதலாக 6 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இதில், மதுரை மண்டலத்திற்கு 63,640 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மதுரைக்கு 22,190 தடுப்பூசிகளும், திண்டுக்கலுக்கு 8,660 தடுப்பூசிகளும், பழனிக்கு 6,620 தடுப்பூசிகளும், தேனிக்கு 6,740 தடுப்பூசிகளும், விருதுநகருக்கு 9,960 தடுப்பூசிகளும், சிவகாசிக்கு 9,470 தடுப்பூசிகளும் பயன்படுத்தப்படவுள்ளன. கோவிஷீல்ட் தடுப்பூசிகள் புதன்கிழமை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.