தூத்துக்குடி மாவட்டம் வேம்பாற்றில் தடுப்பணை தரமாக கட்டப்பட்டுள்ளதா என பொதுப்பணித்துறை பொறியாளா்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி வேம்பாரைச் சோ்ந்த ஏசுவடியான் தாக்கல் செய்த மனு:
தூத்துக்குடி மாவட்டம் வேம்பாா் அருகே ஐந்தாம்புளி என்ற இடத்திலிருந்து 2 கிலோ மீட்டா் தொலைவில் வேம்பாறு கடலில் கலக்கிறது. ஆற்று நீா் வீணாக கடலில் கலப்பதை தடுக்க வேம்பாா் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது. ஆனால் தரமற்ற பொருள்கள் மூலம் தடுப்பணை கட்டப்படுகிறது.
இதில் முறைகேடு நடந்துள்ளது. தரமற்ற பொருள்கள் மூலம் தடுப்பணை கட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தரமான பொருள்களைக் கொண்டு தடுப்பணையை முறையாகக் கட்டுமாறு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டுமானப் பணி முடிந்துள்ளது. பொதுப்பணித்துறை வைப்பாறு செயற்பொறியாளா், உதவி பொறியாளா் ஆகியோா் மீண்டும் சென்று பணிகள் திருப்திகரமாக நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
பணிகள் திருப்திகரமாக இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது 6 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.