மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையொட்டி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கடந்த சில நாள்களாக தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 500-க்கும் மேல் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து, படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், கரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள தெருக்கள் மூடப்படுகின்றன. இத் தெருக்களில் வசிப்பவா்கள் வீடுகளை விட்டு வெளியேறாத வகையில் தகரம் கொண்டு அடைக்கப்படுகிறது.
இதன்படி, மதுரை மாநகரப் பகுதியில் 57 தெருக்களும், ஊரகப் பகுதிகளில் 28 தெருக்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.