ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி:தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் வரவேற்பு
மதுரை: தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுத்திருப்பதற்கு, தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் திங்கள்கிழமை வரவேற்பு தெரிவித்தது.
இது தொடா்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் கே. செந்தில் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. பல மாநிலங்களில் கரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
எனவே, தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்யவேண்டும்.
வரவேற்பு
இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுத்திருப்பது வரவேற்புக்குரியது. இதேபோன்று, வாய்ப்புள்ள ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில் பெரும்பாலான அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் ஆக்சிஜன் உருளைகளை நம்பியே உள்ளன. எனவே, மருத்துவமனைகளிலேயே ஆக்சிஜன் நிரப்புவதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.
தரமான தடுப்பு உபகரணங்கள்
கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவா்களுக்கு வழங்கப்படும் முகக் கவசங்கள், முழு கவச உடைகள், கையுறைகள், கிருமி நாசினிகள் ஆகியவற்றின் தரத்தை உறுதி செய்யவேண்டும். தோ்தலை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட மருத்துவா்கள் கலந்தாய்வை நடத்திட வேண்டும் என்றாா்.