சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அகதிகள் மறுவாழ்வு துறை மாநில துணை ஆணையர் ராமதிலகம் தெரிவித்தார்.
மானாமதுரை ஒன்றியம் மூங்கில்ஊரணி இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலம் ஆகிய இடங்களிலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களுக்கு வியாழக்கிழமை ஆய்வுக்கு வந்த துணை ஆணையர் ராமதிலகம் அங்கு அகதிகளுக்காக கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் சேதம் அடைந்திருப்பதை பார்வையிட்டார்.
அதன் பின்னர் அவர் முகாமில் தங்கியுள்ள அகதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அகதிகள் முகாம்களில் திருமணமாகும் தம்பதிகளுக்கு தனிப் பதிவு வேண்டும்.
முகாம்களில் இடிந்துபோய் உள்ள கழிப்பறைகளை புதிதாக கட்டித்தர வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என துணை ஆணையர் ராம திலகத்திடம் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் வலியுறுத்தினர்.
அப்போது பேசிய துணை ஆணையர் ராமதிலகம் மானாமதுரை இலங்கை அகதி முகாமில் புதிதாக 47 வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோல் மாவட்டம் முழுவதும் ஆறு இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கும். அகதிகள் புதிய பதிவு கோரிக்கை உடனடியாக நிறைவேற்றித் தரப்படும் என்றார்.
இந்த ஆய்வின்போது அகதிகள் மறுவாழ்வு தறை தனி வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.