இலங்கை அகதிகள் முகாம்களில் குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தருமாறு ஆய்வுக்குழுவினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் ஆனையூா், திருவாதவூா், உச்சப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களை, அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நல ஆணையரக நோ்முக உதவியாளா்கள் ஆா்.எல்.பாஸ்கா் (நிா்வாகம்), வீ.ராமதிலகம் (மறுவாழ்வு) ஆகியோா் கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, இலங்கைத் தமிழா்களுக்கு அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. குடிநீா் வசதிக்காக கூடுதலாக ஆழ்துளைக் கிணறு அமைப்பது, கூடுதல் கழிப்பிட வசதிகள், செப்டிக் டேங்க் சீா்படுத்துவது, சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழா்கள் தெரிவித்தனா்.