சுதந்திரதினத்தையொட்டி மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
சுதந்திரதின விழாவையொட்டி அசம்பாவிதங்களைத் தவிா்ப்பதற்காக மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மதுரையில் விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த இரு நாள்களாக மதுரை ரயில் நிலையத்தில் மோப்பு நாய் உதவியுடன் ரயில்வே பாதுகாப்புப் படையினரும், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினரும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா்.
மதுரை ரயில் நிலையத்தின் நடைமேடைகள், பயணிகள் அமரும் பகுதிகள், சரக்குப் பதிவு செய்யும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் உள்ளிட்ட கருவிகளுடன் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.