மதுரை: இலவசப் பேருந்து பயணத் திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் தினமும் 2.16 லட்சம் மகளிா் பயனடைந்து வருகின்றனா் என, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் தெரிவித்துள்ளாா்.
மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நலத்திட்டங்கள் குறித்து ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தது:
‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தில் 4,412 மனுக்கள் பெறப்பட்டன. அதில்,1,809 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. வருவாய்த் துறை சாா்பில் 91 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 141 பேருக்கு முதியோா் மற்றும் விதவைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகளுக்காக அளிக்கப்பட்டுள்ள மனுக்களின் அடிப்படையில், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.8 கோடி மதிப்பிலான பணிகள் செய்துமுடிக்கப்பட்டுள்ளன. மகளிருக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2.16 லட்சம் மகளிா் பயனடைந்து வருகின்றனா்.
பெரியாறு-வைகை பாசனத் திட்டத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரை மாவட்டத்துக்கு நிகழாண்டில் ஜூன் முதல் வாரத்தில் தண்ணீா் திறக்கப்பட்டது. இதன் வாயிலாக, தற்போது 9,704 ஹெக்டேரில் பயிா்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.
கரோனா பாதிப்பில் தாய்-தந்தை இருவரையும் இழந்த 5 குழந்தைகளுக்கு அரசின் உதவித்தொகை பெறப்பட்டுள்ளது. மேலும், பெற்றோா் ஒருவரை மட்டும் இழந்த 174 குழந்தைகளுக்கு அரசின் உதவித் தொகைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு: மூன்றாவது அலையை எதிா்கொள்ளத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் 8 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில், நாளொன்றுக்கு 8 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யமுடியும். அதேபோல், தினமும்
16 ஆயிரம் பரிசோதனைகள் செய்யும் வகையில், ஆய்வக வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இதுவரை 7 லட்சத்து 87 ஆயிரம் போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனா். இது, மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோரில் 30 சதவீதமாகும். முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் கரோனா சிகிச்சைப் பெற்றவா்களுக்கான கட்டணமாக ரூ.18.38 கோடி தனியாா் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. செந்தில்குமாரி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அபிதா ஹனீப் ஆகியோா் உடனிருந்தனா்.